பீஹாரில் 150 காகங்கள் இறப்பு பறவை காய்ச்சல் எச்சரிக்கை
பீஹாரில் 150 காகங்கள் இறப்பு பறவை காய்ச்சல் எச்சரிக்கை
ADDED : பிப் 03, 2026 01:02 AM
பாஹல்பூர்: பீஹாரின் பாஹல்பூரில் 150க்கும் மேற்பட்ட காகங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் பறவைக்காய்ச்சல் உள்ளதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பீஹாரில் பாஹல்பூர் மாவட்டத்தின் நவுகாச்சியா பகுதியில், கடந்த மாதம் 11ம் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்ட மக்கள், அங்கு ஏராளமான காகங்கள் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர், இறந்த காகங்களை பாதுகாப்பாக அகற்றினர். இதுதவிர, பல பறவைகளும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவ்வாறு, 20 நாட்களில், 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து, வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளின் கூட்டுக்குழுக்கள், இறந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பின. ரத்த மாதிரிகளை உறுதிப்படுத்த, பீஹார் தலைநகர் பாட்னா மற்றும் மத்திய பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.
இரு ஆய்வகங்களின் சோதனை அறிக்கைகளிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாஹல்பூர் மாவட்ட நிர்வாகம், தடுப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி 10 கி.மீ., சுற்றளவில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர, அப்பகுதியை சுற்றியுள்ள கோழிப் பண்ணைகளில் இருந்தும் கால்நடைத்துறை அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

