UPDATED : பிப் 10, 2025 04:33 AM
ADDED : பிப் 10, 2025 04:27 AM

மங்களூரு: கர்நாடகாவின் மங்களூரில் நடந்த பாரம்பரிய விளையாட்டான கம்பாலா பந்தயத்தில், 160 ஜோடி எருமை மாடுகள் பங்கேற்று, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
கர்நாடகாவின் தக் ஷிண கன்னடா பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. நெல் வயல்களை உழுவதற்கு எருமை மாடுகளே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த எருமைகளை வைத்து கம்பாலா பந்தயம் நடத்துவது, 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமாக தொடர்கிறது. இதன் ஒரு பகுதியாக, மங்களூரு நகரத்தின் நேத்ராவதி ஆற்றங்கரை ஓரம், கம்பாலா பந்தயம், 15வது ஆண்டாக நடந்தது.
'ஜெய விஜய ஜோடுகரே கம்பாலா' என்றழைக்கப்படும் இந்த பந்தயம், பிப்., 8 - 9ல் நடந்து முடிந்தது.
சகதி நிறைந்த மண் சாலையில், வீரர்கள் ஆளுக்கு இரு எருமைகளை ஓட்டியபடி பந்தயத்தில் பங்கேற்றனர். இதில், 160 ஜோடி எருமைகள் பங்கேற்றன.
அவை, பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்றது, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.