பெங்களூரு நகரில் 3 நாளில் 17,000 டன் குப்பை அகற்றம்
பெங்களூரு நகரில் 3 நாளில் 17,000 டன் குப்பை அகற்றம்
ADDED : அக் 15, 2024 05:59 AM

பெங்களூரு: 'பெங்களூரில் கடந்த மூன்று நாட்களில் 17,733 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது' என, பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை:
பெங்களூரு நகரில் வழக்கமாக நாள்தோறும் 4,900 டன் குப்பை உருவாகிறது. நவராத்திரியை ஒட்டி, குறிப்பாக, அக்., 12ல் 6,306 டன்; 13 ல் 5,561 டன்; நேற்று 5,866 டன் குப்பை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.
தசரா, நவராத்திரியை ஒட்டி நகரின் பல மார்க்கெட்கள், சாலை ஓரங்களில் வாழை மரங்கள், வாழை இலைகள், பூசணிக்காய், மா இலைகள், மலர்கள் விற்பனை செய்யப்பட்டன. விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச் சென்றனர்.
இதையடுத்து, பெங்களூரு மாநகராட்சி குப்பை நிர்வகிப்பு மேம்பாட்டு பிரிவு ஊழியர்கள், கடந்த இரண்டு நாட்களாக குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில், கே.ஆர்., மார்க்கெட், காந்தி பஜார், தேவசந்திரா மார்க்கெட், கே.ஆர்.,புரம் மார்க்கெட், மல்லேஸ்வரம் மார்க்கெட், மடிவாளா மார்க்கெட், ரஸ்ஸல் மார்க்கெட், பாலிகே மார்க்கெட் உட்பட 12 மார்க்கெட்களில் 414 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.
மூன்று நாட்களும் அதிகளவில் குப்பை சேர்ந்ததால், இதை அகற்ற, கூடுதலாக ஜே.சி.பி.,க்கள், டிப்பர் ஆட்டோக்கள், குப்பை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
15_DMR_0010
மாநகராட்சி குப்பை அள்ளும் ஆட்டோவில் நிறைந்துள்ள கழிவுகள். இடம்: பின்னிமில் சாலை, பெங்களூரு.

