sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் 19 பேர் பலி

/

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் 19 பேர் பலி

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் 19 பேர் பலி

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் 19 பேர் பலி


ADDED : ஜூன் 01, 2025 03:16 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 03:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி:வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாது கொட்டும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 19 பேர் பலியாகினர்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், திரிபுரா, மணிப்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மீட்புக் குழு


தொடர் கனமழையால், அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள சிஜின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், டபோரிஜோ உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின; 100க்கும் மேற்பட்ட வீடுகள், குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கின்றன. அங்கிருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சிஜின் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேற்கு கமெங் மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் புகுந்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இதனால் போக்குவரத்து முடங்கியது. ஜமிரிக்கு அருகே 35 சராய் பகுதியில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு கமெங் மாவட்டத்தின் பனா - செப்பா சாலையில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், அவ்வழியாக சென்ற வாகனங்கள் சிக்கின. இதில், கார் ஒன்றில் பயணித்த ஏழு பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.

அசாமில் லக்கிம்பூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலைகள், வீடுகள் என, காணும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளதால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

குவஹாத்தியில் இடைவிடாமல் கொட்டிய மழையால் பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழையால் இங்கு நிலச்சரிவில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

இடிந்து விழுந்தன


மிசோரமின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. லாண்ட்லாய் நகரில் கொட்டிய கனமழையால், ஒரு உணவகம் மற்றும் ஐந்து வீடுகள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கட்டடக் குவியல்களில் குறைந்தது 20 பேர் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களை மீட்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கேரளாவில் பாதிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கேரளா முழுதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, கண்ணுார் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளும் நிறைந்ததால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், அங்கு சிக்கி தவித்த மக்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.தொடர் மழையால் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால், பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us