'லிட்டில் பிளவர்' பள்ளியில் 2 நாள் அறிவியல் கண்காட்சி
'லிட்டில் பிளவர்' பள்ளியில் 2 நாள் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 12, 2024 11:07 PM

பெங்களூரு: 'எலிக்சர் 2024' எனும் கண்காட்சியில், உச்ச நீதிமன்றம் உட்பட பல்வேறு பிரசித்தி பெற்ற கட்டடங்களை வடிவமைத்து, லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பெங்களூரு, ஸ்ரீராமபுரம் சாய்பாபா நகரில், லிட்டில் பிளவர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 'எலிக்சர் 2024' எனும் இரண்டு நாள் கல்வி மற்றும் அறிவியல் கண்காட்சி நேற்று துவங்கியது.
மாவட்ட கல்வி அதிகாரி ரகுசந்திரன், கல்வி வல்லுனர் சைலா, பள்ளி செயலர் மதுசூதன பாபு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தனர்.
தஞ்சாவூர் கோவில்
கண்காட்சியில், பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், ஒடிசாவின் சூரியன், ஹம்பியின் விருபாக் ஷா உட்பட பல மாநிலங்களில் உள்ள, புகழ்பெற்ற கோவில்களை வடிவமைத்து இருந்தனர்.
இதுதவிர உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், விதான் சவுதா உட்பட பல சுற்றுலா தலங்களையும் வடிவமைத்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். சந்திரயான் - 3, தேர்தலில் ஓட்டு போடும் வழிமுறைகள் குறித்தும் வடிவமைத்து இருந்தனர்.
பள்ளியின் தரை தளத்தில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் மற்றும் குஜராத் சபர்மதி ஆசிரமமும் வடிவமைத்து வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் படைப்புகளை கண்டு, பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து, அவர்களை பாாராட்டினர்.