ADDED : மே 21, 2025 09:34 PM
சண்டிகர்:ஹரியானாவில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த, இரண்டு டாக்டர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், கர்ப்பகால மருத்துவக் கருவிகள் சட்டவிரோதமாக வைத்திருந்த மூன்று போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுதிர் ராஜ்பால் தலைமையில், வாரந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்குப் பின், சுதிர் ராஜ்பால் கூறியதாவது:
மாநிலம் முழுதும் கடந்த வாரம் 50 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. உரிமம் இல்லாத 25 கிளினிக்குகள் மூடப்பட்டன.
குருக்ஷேத்திரா, கர்னால் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு டாக்டர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இரண்டு மருந்துக் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு 921 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குருகிராமில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த நவஜீவன் கிளினிக் ஆப்பரேட்டர் சைலன் சர்க்கார் பெங்காலி கிளினிக்கில் பரேஷ் நுனியா மற்றும் பைசல் ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.