காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்
UPDATED : அக் 24, 2024 09:58 PM
ADDED : அக் 24, 2024 08:41 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வாகனத்தில் இருந்த ராணுவ போர்டர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குல்மார்க் பகுதியில் உள்ள படாபத்ரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இரண்டு ராணுவ போர்டர்களும் உயிரிழந்தனர். தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவி வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காஷ்மீரின் வடக்கு பகுதியில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டு உள்ளது கவலை அளிக்கிறது. சமீபத்தில் நடக்கும் தாக்குதல்கள் கவலை அளிக்கிறது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் முற்றிலும் விரைவாக குணமடைய கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீரில் கந்தர்பல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். அவர் உ.பி.,யை சேர்ந்த பிரிதம் சிங் என தெரியவந்தது. இதனையடுத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிமாநிலத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.