சுரேஷ் கோபிக்கு 2 ஓட்டுகளா? இந்திய கம்யூ., நிர்வாகி கேள்வி
சுரேஷ் கோபிக்கு 2 ஓட்டுகளா? இந்திய கம்யூ., நிர்வாகி கேள்வி
ADDED : டிச 11, 2025 12:22 AM

திருவனந்தபுரம்: ''கேரள உள்ளாட்சி தேர்தலில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி திருவனந்தபுரத்தில் ஓட்டு போட்டுள்ளார்.
''அவர் கடந்த லோக்சபா தேர்தலில் திருச்சூரில் ஓட்டு போட்ட நிலையில், இரண்டு இடங்களில் ஓட்டுரிமை உள்ளதா என்பது குறித்து தேர்தல் கமிஷன் விளக்க வேண்டும்,'' என இந்திய கம்யூ., நிர்வாகி அனில் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி.
இவரை எதிர்த்து இந்திய கம்யூ. , சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.அனில் குமார் தோல்வியை தழுவினார்.
இவர், திருச்சூர் எம்.பி.,யும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபிக்கு இரு ஓட்டுகள் உள்ளதா என நேற்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சுரேஷ் கோபி மற்றும் குடும்பத்தினர் திருச்சூர் நெட்டிச்சேரி பகுதியில் தன் வீடு உள்ளதால், அங்கு ஓட்டளித்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
இதில், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் சுரேஷ் கோபி தன் குடும்பத்தினருடன் சென்று, திருவனந்தபுரம் சாஸ்தாமங்கலம் வார்டில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
இது எப்படி சாத்தியம்? அவருக்கு திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரு இடங்களில் ஓட்டுரிமை உள்ளதா என்பது குறித்து தேர்தல் கமிஷனும், அமைச்சர் சுரேஷ் கோபியும் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

