ADDED : அக் 15, 2025 03:41 AM

ஜெய்சால்மர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் இருந்து ஜோத்பூர் நோக்கி நேற்று சென்ற தனியார் ஆம்னி பஸ் தீப்பிடித்ததில், 20 பயணியர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து நேற்று மதியம் 3:00 மணிக்கு, தனியார் ஆம்னி பஸ், 57 பயணியருடன் சென்றது.
ஜெய்சால்மர் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை எழுந்தது.
ஓட்டுநர் உடனே பஸ்சை சாலை ஓரம் நிறுத்தியதும், தீப்பிடித்து முழு வாகனத்தையும் சூழ்ந்தது. அருகிலிருந்த மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீக்காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் நேற்றிரவு வரை, 20 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.
தீ விபத்தில் சிக்கிய பஸ், புதிதாக வாங்கி ஐந்து நாட்களே ஆனதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.