பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் 200 பேர் காஷ்மீரில் சிக்கினர்
பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் 200 பேர் காஷ்மீரில் சிக்கினர்
ADDED : டிச 14, 2025 02:05 AM
ஸ்ரீநகர்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 200 பேரை, ஜம்மு - காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்.,லில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக நம்பப்படும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் நபர்களைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.
பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து, ஜம்மு - காஷ்மீர் போலீசாரும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்முவின் ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சந்தேகத்திற்குரிய 200 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள், பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், நிதியுதவி, தொழில்நுட்ப கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து தந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பாதுகாப்பு படையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, இந்த தேடுதல் வேட்டை நடத்தப் பட்டதாக கூறிய போலீசார், இது தொடரும் என தெரிவித்தனர்.

