ADDED : நவ 24, 2025 08:13 PM

சென்னை : 'மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்திய பரிசோதனையில், 211 மருந்துகள் தரமற்றதாகவும், ஐந்து மருந்துகள் போலியாகவும் இருந்தன' என, மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டில் விற்கப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளித்தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், 211 மருந்துகள் தரமற்றவையாகவும், ஐந்து மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த விபரங்கள், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும், தரமற்ற மருந்து உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

