ரூ.1 கோடி பரிசு அறிவித்து தேடப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 27 பேர் சுட்டுக்கொலை
ரூ.1 கோடி பரிசு அறிவித்து தேடப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 27 பேர் சுட்டுக்கொலை
ADDED : மே 22, 2025 02:52 AM

நாராயண்பூர்:சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், 27 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், 1 கோடி ரூபாய் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் இயக்க தலைவர் பசவராஜு என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நக்சல் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 'ஆப்பரேஷன் பிளாக்பாரஸ்ட்' என்ற பெயரில் மத்திய - மாநில அரசுகள் சார்பில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, மத்திய ரிசர்வ் படையினருடன் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து, அம்மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப்பகுதி அருகே பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில், தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் கேசவ ராவ் எனப்படும் பசவராஜு, 68, சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். இவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய - மாநில அரசுகள் அறிவித்திருந்தன.
தடை செய்யப்பட்ட இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் பிரிவின் பொதுச்செயலராக பசவராஜ் இருந்துள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.