கர்நாடகாவின் கித்துார் மிருகக்காட்சி சாலையில் 28 மான்கள் இறப்பு
கர்நாடகாவின் கித்துார் மிருகக்காட்சி சாலையில் 28 மான்கள் இறப்பு
ADDED : நவ 16, 2025 03:54 AM

பெலகாவி: க ர்நாடகாவின், கித்துார் ரா ணி சென்னம்மா மிருகக்காட்சி சாலையில் மூன்று நாட்கள் இடைவெளியில், 28 மான்கள் சந்தேகத்திற்கிடமாக இறந்தன. இது குறித்து விசாரணை நடத்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், பூதராமனஹட்டி கிராமத்தில் கித்துார் ராணி சென்னம்மா மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு நேற்று முன் தினம், எட்டு மான்கள் திடீரென சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்தன.
இதற்கு என்ன காரணம் என, தெரியாத நிலையில் நேற்று காலையில் 20 மான்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனால், மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பார்வை தகவல் அறிந்தவுடன் வனத்துறை அதிகாரிகள், மிருகக்காட்சி சாலைக்கு சென்று பார்வையிட்டனர். இதற்கிடையே மான்களின் இறப்பு குறித்து, விரிவாக விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கும்படி வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கித்துார் ராணி சென்னம்மா மிருகக்காட்சி சாலையில், 38 மான்கள் இருந்தன. இவற்றில் ஏற்கனவே எட்டு மான்கள் இறந்தன. நேற்று 20 மான்கள் இறந்துவிட்டன. நான்கு முதல் ஆறு வயது வரையிலான, 28 மான்கள் இறந்திருப்பது, எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. கிருமி பரவியதில் இறந்திருக்கலாம் என, முதற்கட்ட பரிசோதனையில் தெரிந்தது.
தற்போது மிருகக்காட்சி சாலையில், 10 மான்கள் மட்டுமே உள்ளன. இறந்த, 25 மான்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விதிமுறைப்படி எரிக்கப்பட்டன.
இன்னும் மூன்று மான்களின் உடல்களை பரிசோதனை செய்ய, பெங்களூரின், பன்னரகட்டா தேசிய பூங்காவில் இருந்து, வல்லுநர்கள் வருவர்.
ஏற்கனவே இறந்த மான்கள் பற்றிய அறிக்கையை, பன்னரகட்டாவுக்கு அனுப்பி உள்ளோம். அங்குள்ள வல்லுநர்கள் ஆய்வு செய்த பின்னரே, மான்களின் இறப்புக்கு என்ன காரணம் என்பது, தெளிவாக தெரியும்.
பரிசோதனை மிருகக்காட்சி சாலையில் எஞ்சியுள்ள, 10 மான்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது; அவை ஆரோக்கியமாக உள்ளன.
மற்ற விலங்கு களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. முன்னெச்சரிக்கையாக அனைத்து விலங்குகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வல்லுநர் கமிட்டி அமைப்பு
கித்துார் ராணி சென்னம்மா மிருகக்காட்சி சாலையில், மூன்று நாட்களில் 28 மான்கள் இறந்ததை கேட்டு, வருத்தமடைந்தேன். இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, தொற்று காரணமாக மான்கள் இறந்ததாக தெரிகிறது. மற்ற விலங்குகளுக்கு, தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அசுத்த நீர், உணவு சாப்பிட்டு நோய் ஏற்பட்டு இறந்தனவா அல்லது பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளால் தொற்று பரவியதா என்பதை கண்டறிய, வல்லுநர் கமிட்டி அமைக்கப்படும். ஈஸ்வர் கன்ட்ரே, வனத்துறை அமைச்சர், காங்.,

