இலங்கை நீதிபதிகள் 30 பேருக்கு இந்தியாவில் ஓரு வார பயிற்சி
இலங்கை நீதிபதிகள் 30 பேருக்கு இந்தியாவில் ஓரு வார பயிற்சி
ADDED : ஜன 21, 2026 08:39 PM

கொழும்பு: இலங்கையின் மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 30 மாவட்ட நீதிபதிகள், இந்தியாவில் ஒரு வார பயிற்சியில் பங்கேற்றனர்.
இலங்கையைச் சேர்ந்த நீதிபதிகள் குழுவினர் இந்தியாவின் போபாலில் உள்ள இந்திய தேசிய நீதித்துறை அகாடமியில் நடைபெற்ற சிறப்புத் திறன் மேம்பாட்டு மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நீதித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையின் மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 30 நீதிபதிகள் ஜனவரி 12 முதல் 16 வரை ஒரு வார காலப் பயிற்சியில் கலந்துகொண்டனர். இலங்கை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையின் பேரில்,சிறார் நீதி மற்றும் சுற்றுச்சூழல் சட்ட நீதிமுறை,பணமோசடி தடுப்பு மற்றும் தண்டனை வழங்கும் நடைமுறைகள்,சைபர் குற்றங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களைக் கையாளுதல்,நீதித்துறை மன அழுத்த மேலாண்மை மற்றும் நல்வாழ்வு ஆகியவை குறித்து பரிமாற்றம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் சுமார் 1,000 இலங்கையர்களுக்கு பல்வேறு துறைகளில் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சிகளை வழங்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.நீதிபதிகள் தவிர, ஆண்டுக்கு சுமார் 300 அரசு அதிகாரிகளுக்கும் இந்தியாவின் தேசிய நல்லாட்சி மையத்தின் மூலம் பயிற்சி அளிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இப்பயிற்சிகளின் ஒரு பகுதியாக, நீதிபதிகள் சாஞ்சி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு, கலாச்சார ரீதியிலான தொடர்புகளும் மேம்படுத்தப்படுகின்றன.இவ்வாறு இந்திய துாதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

