'முடா' வழக்கில் காங்., பிரமுகரின் 31 வீட்டுமனை முடக்கம்
'முடா' வழக்கில் காங்., பிரமுகரின் 31 வீட்டுமனை முடக்கம்
ADDED : அக் 11, 2025 07:31 AM

மைசூரு : 'முடா' வழக்கில் மைசூரு காங்கிரஸ் பிரமுகரின் 31 வீட்டுமனைகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
'முடா' எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் பயனாளிகளுக்கு 50:50க்கு திட்டத்தின் கீழ் வீட்டுமனைகள் ஒதுக்கி வந்தது.
இதில் நடந்த முறைகேடு பற்றி, லோக் ஆயுக்தா போலீசார் விசாரிக்கின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் புகார் பற்றி ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது.
வழக்கின் 'மாஸ்டர் மைண்ட்' என்று கூறப்படும், 'முடா' முன்னாள் கமிஷனர் தினேஷ் குமார் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஈ.டி., நடத்திய தொடர் விசாரணையில், மைசூரு காங்கிரஸ் பிரமுகர் பாப்பண்ணா என்பவருக்கு, மைசூரில் முக்கிய இடத்தில் 31 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, 60 கோடி ரூபாய் மதிப்பிலான 31 வீட்டுமனைகளை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கியது. விசாரணைக்கு ஆஜராக பாப்பண்ணாவுக்கு சம்மன் வழங்கவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.