"எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை": ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பேச்சு
"எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை": ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : மே 04, 2024 11:59 AM

ராஞ்சி: 'எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர்' என பிரதமர் மோடி பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்கள் அனைவரும் ஓட்டின் மதிப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் பா.ஜ., ஓட்டளித்து ஊழல் செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுத்தார்கள். அதன் விளைவாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது.
காங்கிரஸ் 'கோழை'
பயங்கரவாத தாக்குதல்களை கண்டு காங்கிரசின் கோழை அரசு உலக அரங்கில் அழுதது. இந்தியா உலக அரங்கில் அழுது கொண்டிருந்த காலம் போய்விட்டது. இப்போது, பாகிஸ்தான் உதவிக்காக அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் ராகுலை பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
25 கோடி பேர்
காங்கிரஸ் ஆட்சியில், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தினமும் நக்சலைட்கள் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர். பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
என் மீது ஊழல் குற்றச்சாட்டு 'நோ'
எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
அரசியலமைப்புச் சட்டம்
காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியினர் ஒரு ஆபத்தான விஷயத்தை கூறியுள்ளனர். இவர்கள் இப்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கிறார்கள். நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருந்தனர்.
இப்போது காங்கிரஸ் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டை கொள்ளையடித்து, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.