UPDATED : ஜூலை 14, 2025 08:03 AM
ADDED : ஜூலை 13, 2025 11:30 PM

புதுடில்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு வழக்கறிஞர் உஜ்வல் நிஹாம், வெளியுறவு முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, சமூக சேவகர் சதானந்தன் மாஸ்டர், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய நான்கு பேரை, ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்களாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
மீனாட்சி ஜெயின்
மீனாட்சி ஜெயின், வரலாற்று ஆய்வாளர். இவர், டில்லி கர்கி கல்லுாரியின் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 2014ல், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் உறுப்பினராக, மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார்.
கல்வி, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்றுள்ள இவர், ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக, நம் நாட்டின் வரலாறு, நாகரிக தொன்மை உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன.
உஜ்வல் நிஹாம்
சிறப்பு அரசு வழக்கறிஞராக இருந்த உஜ்வல் நிஹாம், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்பிற்கு எதிராக மஹாராஷ்டிரா சார்பில் ஆஜரானவர்.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், மும்பை வடக்கு மத்திய தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட உஜ்வல் நிஹாம் தோல்வியை தழுவினார்.
முன்னதாக, 2016ல் இவருக்கு, மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சதானந்தன் மாஸ்டர்
கேரளாவைச் சேர்ந்த இவர், ஆசிரியராக பணியை துவக்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருந்தார். அதன் கொள்கைகள் பிடிக்காததால், 1984ல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அரசியல் பழிவாங்கும் நோக்குடன், 1994ல், சதானந்தன் மாஸ்டரின் இரு கால்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களால் வெட்டப்பட்டன. செயற்கை கால்களுடன் வலம் வரும் இவர், ஆசிரியராகவும், சமூகத் தொண்டராகவும் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.
ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா
இந்திய வெளியுறவு அதிகாரியாக 1984ம் ஆண்டு பொறுப்பேற்ற ஷிரிங்லா, 2020 முதல் 2022 வரை வெளியுறவு செயலராக பணியாற்றினார். அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் துாதராகவும் இருந்தார்.
2019ல் அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியின் போது,பிரதமர் மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். 2023ல், 'ஜி- - 20' மாநாட்டை இந்தியா நடத்தியபோது தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இவர் பணியாற்றினார்.