20 வயது பெண்ணை திருமணம் செய்த 40 வயது நபர் அடித்து கொலை
20 வயது பெண்ணை திருமணம் செய்த 40 வயது நபர் அடித்து கொலை
ADDED : நவ 29, 2024 12:05 AM

சித்ரதுர்கா; காதலித்து, 20 வயது பெண்ணை திருமணம் செய்த 40 வயது நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
சித்ரதுர்கா அருகே கோணனுார் கிராமத்தில் வசித்தவர் மஞ்சுநாத், 40. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஜாதியை சேர்ந்த ஷில்பா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், குடும்ப தகராறில் ஷில்பா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் மஞ்சுநாத்திற்கும், அவரது ஜாதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஆனால், வயதை காரணம் காட்டி இளம்பெண் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், 20 நாட்களுக்கு முன் இருவரும் கோவிலில் திருமணம் செய்தனர். கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணின் பெற்றோர் முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சுநாத்தின் வீட்டிற்குள் புகுந்த இளம்பெண்ணின் உறவினர்கள் 20 பேர் மஞ்சுநாத், அவரது தந்தை சந்திரப்பா, தாய் அனுசுயா ஆகியோரை மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த மஞ்சுநாத் பரிதாபமாக இறந்தார். அவரது பெற்றோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக, பரமசாகரா போலீசார், 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இளம்பெண்ணும், மஞ்சுநாத்தும் பேசிய மொபைல் போன் உரையாடல் ஆடியோ வெளியாகியுள்ளது. இளம் பெண்ணிடம், 'என்னை காதலிக்க வேண்டாம். நான் சிறைக்கு சென்று வந்தவன்' என்று மஞ்சுநாத் புத்திமதி கூறுகிறார். ஆனால், 'நீங்கள் தான் எனக்கு வேண்டும்' என்று இளம்பெண் கூறுகிறார். இந்த ஆடியோ வேகமாக பரவுகிறது.