ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்பட 5 பேர் கைது
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்பட 5 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2025 01:38 PM

ஹைதராபாத்: ஹைதராபாத் அணிக்கு மிரட்டல் மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு புகாரின் பேரில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன்மோகன் ராவ் உள்பட 5 பேரை தெலங்கானா சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜூன் 9ம் தேதி ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன்மோகன் ராவ் மீது தெலங்கானா கிரிக்கெட் சங்கத்தின் பொதுச்செயலாளர் குருவா ரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவருக்கான தேர்தலின் போது, ஜெகன்மோகன் ராவ் போலி ஆவணங்களை சமர்பித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கிரிக்கெட் சங்கத்தின் ரூ.232 கோடி நிதியை அபகரித்து விட்டதாக புகார் கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது, நிறைய டிக்கெட்டுக்களை இலவசமாக கேட்டு ஹைதராபாத் அணிக்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன்மோகன் ராவ் அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த மார்ச் 27ம் தேதி ல்க்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது, கூடுதலாக 20 டிக்கெட்டுக்களை கொடுக்கா விட்டால், கார்ப்பரேட் பாக்ஸ் டிக்கெட்டுக்களை விற்பனைக்கு திறக்க மாட்டோம் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மிரட்டியதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த மாதம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணங்களை சமர்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன்மோகன் ராவ், பொருளாளர் ஸ்ரீனிவாஸ், சி.இ.ஓ., சுனில் காந்தே ஆகியோரை சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்களான ராஜேந்திர யாதவ் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.