குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை இன்று துவக்கம்
குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை இன்று துவக்கம்
ADDED : ஆக 26, 2025 03:27 PM

குருவாயூர்: மாற்று மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கோவில் குளத்தில் இறங்கி வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்டதை தொடர்ந்து குருவாயூர் கோவிலில் இன்று பரிகார பூஜை தொடங்கியுள்ளது.
குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோவில் புனித குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாஸ்மின் ஜாபர் என்ற இளம் பெண் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டார்.
சோசியல் மீடியா பிரபலமான அந்தப் பெண் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். குருவாயூர் கோவிலில் ஹிந்து அல்லாத பிற மதத்தவர்களுக்கு அனுமதி கிடையாது.
அப்படி இருந்தும் ஜாஸ்மின் ஜாஃபர் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் கோவிலில் வெவ்வேறு வகையான பரிகார பூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் மதியம் வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆறு நாட்களுக்கு இந்த பூஜை தொடரும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே, ரீல்ஸ் வெளியிட்ட ஜாஸ்மின் ஜாபர், அந்த வீடியோவை அழித்து விட்டது உடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.