ADDED : ஆக 17, 2026 05:51 PM
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், ஹோட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில், பிர்பூம் மாவட்டத்தின் தாராபதி என்ற பகுதியில் பிரசித்தி பெற்ற காளி கோவில் உள்ளது. புனித மாதமான ஷரவனின் மூன்றாவது திங்கட்கிழமையான நேற்று, இந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள், அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் தங்கினர்.
நான்கு மாடிகள் உடைய அந்த ஹோட்டலின் தரைத்தளத்தில், ஏராளமான பக்தர்கள் துாங்கிக் கொண்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வரவேற்பு அறையில் இருந்த செயற்கை கூரைகள், பைபர் கிளாஸ் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததால், தீ மளமளவென பரவியது. இதனால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
அதன்பின், ஹோட்டலில் தங்கியிருந்த நபர்களை மீட்கும் பணி நடந்தது. இதில் பலர் மூச்சுத்திணறலால் மயங்கிய நிலையில், அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் பரிசோதித்தில், அவர்களில் ஏழு பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. தீக்காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
