தேச விரோத செயல்களில் ஈடுபட்டால் மஹாராஷ்டிராவில் 7 ஆண்டுகள் சிறை
தேச விரோத செயல்களில் ஈடுபட்டால் மஹாராஷ்டிராவில் 7 ஆண்டுகள் சிறை
ADDED : ஜூலை 13, 2025 03:30 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை தடுக்கும் நோக்கில், சிறப்பு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில சட்டசபையில், மஹாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா - 2024, கடந்த 10ம் தேதி நிறைவேறிய நிலையில், சட்ட மேலவையில் 11ம் தேதி நிறைவேறியது.
கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா, அவர் ஒப்புதல் அளித்ததும் நடைமுறைக்கு வரும்.
இந்த மசோதாவின்படி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் தனிநபர் அல்லது குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை வாரன்ட் இல்லாமல் போலீசார் கைது செய்யலாம்
தடை செய்யப்பட்ட அமைப்பு களில் உறுப்பினர்களாக இல்லாத நபர்கள், நிதி திரட்டுதல் போன்ற மறைமுக வேலைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்
சில அமைப்புகள் பொது அமைதியை கெடுப்பது, வன்முறையை துாண்டுவது போன்றவற்றில் ஈடு பட்டால், அந்த அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவிக்க, இந்த மசோதா அனுமதி வழங்குகிறது. மேலும், அவற்றின் சொத்துக்கள் மற்றும் நிதியையும் அரசு முடக்கலாம்
நிதி முடக்கம் தவிர, மற்ற அனைத்து விவகாரங்களுக்கும் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும்.