கிராமங்களில் 70 சதவீத மக்கள் : சமீபத்திய கணக்கெடுப்பில் தகவல்
கிராமங்களில் 70 சதவீத மக்கள் : சமீபத்திய கணக்கெடுப்பில் தகவல்
ADDED : ஜூலை 16, 2011 04:23 AM
புதுடில்லி : 'இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளில்தான் வாழ்கின்றனர்.
அதேநேரம், ஒட்டு மொத்த மக்கள் தொகை வளர்ச்சி, இந்திய விடுதலைக்குப் பின், முதன் முதலாக குறைந்துள்ளது' என, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 'இந்தியாவின் 2011 தற்போதைக்கான கிராம - நகர மக்கள் தொகைக் கணக்கெடுப்பு' அறிக்கையை நேற்று மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் வெளியிட்டார். இதன்படி, ஒட்டு மொத்த மக்கள் தொகையான 121 கோடி பேரில், 37.7 கோடி பேர் தான் நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
மீதமுள்ள 70 சதவீதம் பேர், கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். அதே நேரம், நாடு விடுதலை அடைந்தபின் முதன் முறையாக, கிராமப் பகுதிகளை விட, நகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. நகர்ப் பகுதிகளில், 2001ல் மக்கள் தொகை 27.81 சதவீதம் இருந்தது. கிராமப் பகுதிகளில் 72.19 சதவீதம் இருந்தது.
உத்தர பிரதேசத்தில் தான் மிக அதிகளவாக 15.5 கோடி பேர், கிராமங்களில் வசிக்கின்றனர். நகரங்களில், மும்பையில் மிக அதிகபட்சமாக ஐந்து கோடி பேர் உள்ளனர். கடந்த 2001ல், கிராமங்களில் 1,000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்ற அளவில் இருந்தனர். தற்போது அது 947 ஆக அதிகரித்துள்ளது. நகரங்களில், 2001ல் 900 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை தற்போது 926 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம், கேரளா மற்றும் டில்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில், நகர்ப்பகுதி பாலியல் விகிதம், கிராமத்தை விட அதிகரித்துக் காணப்படுகிறது.