ADDED : ஜூலை 25, 2025 01:06 AM
மண்டி: ஹிமாச்சலில் அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில், எட்டு பயணியர் உயிரிழந்தனர்.
ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ஜாம்னியில் இருந்து சார்காட் நோக்கி, 30 பயணியருடன் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ், மசேரன் தல்காரா அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து பற்றி அறிந்து அங்கு வந்த போலீசார், உள்ளூர்வாசிகள் உதவியுடன் விபத்தில் சிக்கிய பயணியரை மீட்டனர். இதில், மூன்று பெண்கள் உட்பட எட்டு பயணியர் உயிரிழந்தனர்; 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சார்காட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.