30 அடி உயரத்தில் செயலிழந்த ராட்டின ஊஞ்சல்: சிக்கியவர்கள் போராடி மீட்பு
30 அடி உயரத்தில் செயலிழந்த ராட்டின ஊஞ்சல்: சிக்கியவர்கள் போராடி மீட்பு
ADDED : நவ 13, 2025 07:09 AM

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில், தரையில் இருந்து மேலே நகரும் போது திடீரென செயலிழந்த ராட்டின ஊஞ்சலில் சிக்கித் தவித்த 8 பேரை மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி வெற்றிகரமாக மீட்டனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், உள்ளூர் திருவிழாவை முன்னிட்டு, பிரம்மாண்ட ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு ராட்டினத்தில் இருந்த ஊஞ்சல், தரையில் இருந்து 30 அடி உயரத்தில் இயக்கத்தில் இருந்தபோது திடீரென செயல் இழந்தது. இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
ஊஞ்சலில் குழந்தைகள் உட்பட எட்டு பேர் சிக்கி இருந்தனர். நேரம் செல்லச் செல்ல பதற்றம் அடைந்த அவர்கள் கதறி அழ ஆரம்பித்தனர். இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாதுகாப்பாக மீட்பது பற்றி திட்டமிட்டனர்.
இரண்டு மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு ஊஞ்சலில் சிக்கித் தவித்த 8 பேரை மீட்பு படையினர ஹைட்ராலிக் லிப்ட் உதவியுடன் வெற்றிகரமாக மீட்டனர். ஊஞ்சலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

