ADDED : டிச 25, 2024 12:51 AM
கொச்சி, கேரளாவில் என்.சி.சி., முகாமில் கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதால், மாணவர்களில் 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் கே.எம்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, கடந்த 20ம் தேதியில் இருந்து என்.சி.சி., முகாம் நடந்தது. இதில் எர்ணாகுளம் மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு கல்லுாரியிலேயே உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அந்த உணவை சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டு, அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதிக அளவிலான மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து, அவர்களின் பெற்றோர் கல்லுாரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் என்.சி.சி., முகாம் நேற்றுடன் நிறுத்தப்பட்டு, மீதமுள்ள மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதை தொடர்ந்து நகர்ப்புற சுகாதார அதிகாரிகள், கல்லுாரியில் வழங்கிய உணவு மற்றும் குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது குறித்து, கல்லுாரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.

