பள்ளியில் திடீர் மாரடைப்பு: 9 வயது சிறுமி பரிதாப பலி
பள்ளியில் திடீர் மாரடைப்பு: 9 வயது சிறுமி பரிதாப பலி
ADDED : ஜூலை 18, 2025 01:49 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளி உணவு இடைவேளையின் போது, அடுத்தடுத்து இரு முறை ஏற்பட்ட மாரடைப்பால் 9 வயது சிறுமி உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள தண்டா பகுதியில் ஆதர்ஷ் வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிராச்சி குமாவத், 9, என்ற சிறுமி, நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை, குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி பள்ளியில் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது சாப்பிடுவதற்காக குமாவத் தன், 'லஞ்ச் பாக்ஸை' திறந்துள்ளார்.
அப்போது திடீரென குமாவத் மயங்கி சரிந்தார். உடனே சிறுமியை மீட்ட ஆசிரியர்கள் அவரை ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளித்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சிகாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பிராச்சி குமாவத் உயிரிழந்தார்.
அடுத்தடுத்து இரு முறை ஏற்பட்ட மாரடைப்பால் சிறுமி உயிரிழந்ததாக டாக்டர் தெரிவித்தார். 9 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.