7,500 போலீஸ் பணியிடத்துக்கு 9.5 லட்சம் பேர் விண்ணப்பம்
7,500 போலீஸ் பணியிடத்துக்கு 9.5 லட்சம் பேர் விண்ணப்பம்
ADDED : அக் 10, 2025 12:34 AM

போபால்:மத்திய பிரதேசத்தில், 10ம் வகுப்பு கல்வி தகுதியுடன் அறிவிக்கப்பட்ட, 7,500 கான்ஸ்டபிள் இடங்களுக்கு, பட்டதாரிகள், இன்ஜினியர்கள், பிஎச்.டி., ஆராய்ச்சியாளர்கள் உட்பட 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் காவல் துறையில் காலியாக உள்ள, 7,500 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதற்கான அதிகபட்ச கல்வி தகுதி, 10ம் வகுப்பு என தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுதும் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள 7,500 இடங்களுக்கு, மொத்தம் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், 52,000 முதுநிலை பட்டதாரிகள், 33,000 இளநிலை பட்டதாரிகள், 12,000 இன்ஜினியர்கள், 50 பிஎச்.டி., ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர்.
நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாததால், 10ம் வகுப்பு நிலை பதவிகளுக்கு கூட விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விண்ணப்பதாரர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ம.பி.,யைச் சேர்ந்த கல்வியாளர்கள் கூறுகையில், 'மத்திய பிரதேசத்தில் நீண்ட நாளாக அரசு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. பட்டதாரிகள் பிற மாநிலங்களுக்கு சென்று வேலைபார்க்கும் நிலை உள்ளது.
'அதனால்தான், குறைந்த கல்வி தகுதி என்றாலும் பரவாயில்லை; நிரந்தர வேலை வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கானோர் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்' என, தெரிவித்தனர்.