ஹலசூரு ராமகிருஷ்ணா மடத்தில் மரங்களை வெட்டிய கும்பல்
ஹலசூரு ராமகிருஷ்ணா மடத்தில் மரங்களை வெட்டிய கும்பல்
ADDED : நவ 17, 2024 11:05 PM
ஹலசூர்: வரலாற்று பிரசித்தி பெற்ற ராமகிருஷ்ண மடத்தில், மிகவும் பழமையான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
பெங்களூரின், ஹலசூரு அருகில் ராமகிருஷ்ண மடம் உள்ளது. இது 135 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கதாகும். மடத்தின் வளாகத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலான, பழைய மரங்கள் உள்ளன. இதே காரணத்தால் தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, மடத்தின் வளாகத்தில் நுழைந்த மர்ம கும்பல், இங்கிருந்த 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான ருத்ராக் ஷ மரம், வன்னி மரம், பலா, அசோக மரம் உட்பட பல்வேறு மரங்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பியது. நேற்று காலை மடத்தின் ஊழியர்கள், இதை கவனித்து உடனடியாக ஹலசூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும் மடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மர்ம கும்பலை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.ராமகிருஷ்ண மடத்தின் டிரஸ்டி குணசேகர் அளித்த பேட்டி:
எங்களுடையது 135 ஆண்டுகள் வரலாறு கொண்ட, புராதண மடமாகும். மடத்தின் வளாகத்தில் 150 ஆண்டுகளுக்கு பழமையான மரங்கள் உள்ளன. 15 - 20 ஆண்டுகளுக்கு முன், நாங்களும் பழைய மரங்களை நாங்கள் நட்டுள்ளோம். இந்த மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
தினமும் கடவுள் பூஜைக்காக, நாங்கள் பூச்செடிகள் நட்டிருந்தோம். இவற்றையும் வெட்டி போட்டுள்ளனர். இது தொடர்பாக, வனத்துறைக்கும், போலீசாருக்கும் புகார் அளித்துள்ளோம். மரங்களை வெட்டியவர்களை கண்டுபிடித்து, சட்டப்படி தண்டிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மடத்தின் ஊழியர் ராமசந்திரா கூறியதாவது:
பல ஆண்டுகளாக ராமகிருஷ்ணா மடத்தில் பணியாற்றுகிறேன். தினமும் காலை ருத்ராக் ஷ மரத்துக்கு நாங்கள் பூஜை செய்வது வழக்கம். அதே போன்று இன்று (நேற்று) காலை, பூஜை செய்ய வந்தபோது, மரம் வெட்டப்பட்டது தெரிந்தது.
பூஜைக்குரிய மரத்தை இப்படி செய்திருப்பது, மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. மரங்களை நாங்கள் கடவுளுக்கு சமமாக கருதி வணங்கினோம். இத்தகைய மரங்களை விஷமிகள் வெட்டியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.