ADDED : நவ 01, 2024 06:54 AM

பொதுவாக விளையாட்டு வீரர்கள் காயம் அடைந்தால், வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், விளையாட்டு ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் அளவை தாண்டி, வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அது விளையாட்டு வீரர்களுக்கு பெரிய தலைவலியாக மாறிவிடும். ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்ட, ஒரு பளுதுாக்கும் வீரருக்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டது.
தட்சிண கன்னடாவின் மங்களூரைச் சேர்ந்தவர் சதீஷ் ராய், 53. பளுதுாக்கும் வீரர். 76 கிலோ எடை பளுதுாக்கும் போட்டியில் பங்கேற்றார். 1998ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்திய பளுதுாக்கும் அணி சார்பில், 76 கிலோ எடை துாக்கும் பிரிவில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்றார்.
இதனால் அவருக்கு 1999ல் அர்ஜுனா விருது கிடைத்தது. 2002 காமன்வெல்த் போட்டியிலும் இரண்டு தங்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், தடை செய்யப்பட்ட பொருட்களை உட்கொண்டது தெரிந்தது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட தங்கம் திரும்ப பெறப்பட்டது.
கடந்த 2016ல் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த போட்டியிலும், ஸ்டீராய்டு ஸ்டானோசோலோல் என்ற மருந்தை பயன்படுத்தியதால் சிக்கினார். ஆனாலும் அவரை இந்திய பளுதுாக்குதல் கூட்டமைப்பு மன்னித்துவிட்டது.
ஆனால் ஒலிம்பிக் கமிட்டியான வாடா அழுத்தத்தால், சதீஷ் ராய் பளுதுாக்குதல் போட்டிகளில் பங்கேற்ற நிரந்தர தடை விதித்து, 2017ல் இந்திய பளுதுாக்குதல் கூட்டமைப்பு உத்தரவிட்டது. விளையாட்டு வீரர்கள் ஏதாவது உணவு சாப்பிடும்போது கவனமாக இருப்பது அவசியம்
. - நமது நிருபர் -

