ADDED : செப் 21, 2024 01:22 AM
புதுடில்லி, உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வீடு கட்டி தருவதாக மக்களிடம் இருந்து, 426 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த நிறுவனம் மற்றும் அதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 42 கோடி ரூபாய் மதிப்பு தங்கம், வைர நகைகள் மற்றும் ரொக்கம் சிக்கின.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹெச்.பி.பி.எல்., எனப்படும் ஹசிந்தா புராஜக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நொய்டாவில், 'லோட்டஸ் 300' என்ற பெயரில் வீடு கட்டித்தருவதாக கூறி, பொது மக்களிடம் இருந்து 426 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார் உள்ளது.
இது தொடர்பாக டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கின் அடிப்படையில், ஹெச்.பி.பி.எல்., மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், ஹெச்.பி.பி.எல்., நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நொய்டா ஆணையத்தின் ஓய்வுபெற்ற தலைமைச் செயல் அலுவலர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த 17 மற்றும் 18ல் சோதனை நடத்தினர்.
நொய்டா, டில்லி, கோவா உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் 42 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.