முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு காதல் ஜோடி துாக்கிட்டு தற்கொலை
முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு காதல் ஜோடி துாக்கிட்டு தற்கொலை
ADDED : பிப் 03, 2024 11:03 PM

கலபுரகி: முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், காதல் ஜோடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கலபுரகி யாட்ராமி மாகனகெரே கிராமத்தில் வசித்தவர்கள் கொல்லப்பா, 24. சசிகலா, 20. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு, இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தது.
உறவு முறையில் கொல்லப்பாவும், சசிகலாவும் அண்ணன் - தங்கை ஆவர். இதனால் இரு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. சசிகலாவுக்கும், விஜயபுராவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறிய சசிகலா, கொல்லப்பாவை சந்தித்தார். இருவரும் கோவிலில் திருமணம் செய்தனர். உறவுமுறையை காரணம் காட்டி, பெற்றோர் பிரித்து விடுவர் என்று பயந்தனர். ஒன்றாக வாழ முடியாது. ஆனால் ஒன்றாக சாகலாம் என்று முடிவு செய்தனர்.
கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு சென்று, ஒரே மரத்தில் இருவரும், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
யாட்ராமி போலீசார் விசாரிக்கின்றனர்.