பார்லிமென்ட் மைய மண்டபத்தில் 26ல் நடக்கிறது சிறப்பு கூட்டம்
பார்லிமென்ட் மைய மண்டபத்தில் 26ல் நடக்கிறது சிறப்பு கூட்டம்
ADDED : நவ 05, 2024 02:11 AM

அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணயசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு சபைகளின் சிறப்பு கூட்டுக் கூட்டம் பழைய பார்லிமென்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மைய மண்டபத்தில் வரும் 26ல் நடைபெறவுள்ளது.
சிறப்பு நிகழ்ச்சி
நம் அரசியலமைப்பு சட்டம், 1949 நவம்பர் 26ல் வரலாற்றுச்சிறப்பு மிக்க பார்லிமென்ட் மைய மண்டபத்தில் கூடிய அரசிலமைப்பு நிர்ணயசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1950 ஜனவரி 26ல் அமலுக்கு வந்தது. 75 ஆண்டுகளை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக குளிர்கால கூட்டத்தொடர் துவங்கி, இரண்டாவது நாளான நவம்பர் 26 அன்று பார்லிமென்டில் சிறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.
பழைய பார்லிமென்ட் கட்டடத்தின் மைய மண்டபத்தில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளின்போது மட்டுமே கூட்டு கூட்டம் நடத்தப்படும்.
அதிலும், இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளின்போது சிறப்பு கூட்டமாக நடத்தப்படும். இதில், பிரதமர் உட்பட லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளின் எம்.பி.,க்களும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், நவம்பர் 25ல் துவங்கும் குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ச்சியாக 21 அமர்வுகளுடன் நடந்து, டிசம்பர் 23ல் நிறைவு பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மிக முக்கியமாக இரண்டு விஷயங்கள் பரபரப்பை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.
முதலாவது, வக்பு வாரிய மசோதா. மற்றொன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விவகாரம்.
வக்பு மசோதாவை நிறைவேற்ற எல்லா வகையான முயற்சிகளிலும் இறங்கியுள்ள மத்திய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் முக்கிய நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் பா.ஜ., சற்றே அடக்கி வாசித்தது. எதிர்க்கட்சிகள் கை ஓங்கியிருந்தது. தற்போது ஹரியானாவில் பா.ஜ., ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
திண்டாட்டம்
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடருக்கு மத்தியில் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகப்போகின்றன.
இதில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தால் குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் நிலைமை திண்டாட்டம் ஆகி விடலாம் என்பதால் டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -