பெங்களூரில் விபரீத பந்தயம் பட்டாசு வெடித்து வாலிபர் பலி
பெங்களூரில் விபரீத பந்தயம் பட்டாசு வெடித்து வாலிபர் பலி
ADDED : நவ 05, 2024 02:16 AM
பெங்களூரு, பெங்களூரில் குடிபோதையில் பந்தயம் கட்டி பட்டாசு வெடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தீபாவளியன்று இரவு நவீன், தினகர், சத்யவேலு, கார்த்திக், சதீஷ், சந்தோஷ், சபரீஷ் ஆகிய இளைஞர்கள், குடிபோதையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்கள் இடையே பந்தயம் கட்டுவது தொடர்பாக விவாதம் ஏற்பட்டது. இதில், பட்டாசு மீது ஒரு பிளாஸ்டிக் டப்பாவை வைத்து, அதன் மீது அமர முடியமா என அவர்களுக்குள் சவால் விடுத்தனர்.
முதலில் சபரிஷ் என்பவர், பந்தயத்துக்கு ஒப்புக் கொண்டார். பந்தயத்தில் வெற்றி பெற்றால், ஆட்டோவை பரிசாக வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்; நண்பர்களும் ஒப்புக் கொண்டனர்.
அதன்படி பட்டாசு மீது பிளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்து, அதன் மீது சபரீஷ் அமர்ந்து கொண்டார். பட்டாசு வெடித்ததும், அவரது மர்ம உறுப்பில் பலத்த சேதம் ஏற்பட்டது. வலியால் துடித்த சபரீஷை, பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி, 2ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார், நண்பர்கள் ஆறு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.