ADDED : நவ 11, 2024 05:31 AM

பாகல்கோட்: எதையும் வித்தியாசமாக செய்வதில் இளைஞர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது. இளைஞர் ஒருவர், 500 ரூபாய் நோட்டுகளால் வடிவமைக்கப்பட்ட சட்டையை அணிந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
பாகல்கோட் மாவட்டம், முதோலின் சித்ரா பானுகோடி கிராமத்தை சேர்ந்தவர் கல்லப்பா தல்வார், 22. இக்கிராமத்தில், சச்சிதானந்த சகஜானந்த ராமாரூட சுவாமிகள் ரத உற்சவம் நேற்று நடந்தது.
இவ்விழாவில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று கல்லப்பா தல்வார் முடிவு செய்தார். அதற்காக, தனது நண்பர்களுடன் பேசினார்.
கர்நாடகாவின் வட மாவட்டத்தை சேர்ந்த 'தங்கம்' சுரேஷ், தன்னிடம் இருந்த கிலோ கணக்கிலான தங்க நகைகளை அணிந்து, நடமாடியதால், பிரபலமடைந்ததை அறிந்தார்.
அதுபோன்று தானும் செய்ய நினைத்தார். ஆனால் தன்னிடம் தங்கம் இல்லாததால், ரூபாய் நோட்டுகள் மூலம் சட்டை அணிந்து செல்லலாம் என நண்பர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து, தன்னிடம் இருந்த, 50,000 ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை, சட்டை போன்று வடிவமைத்து கொண்டார்.
இந்த சட்டையை அணிந்து கொண்டு, ரத உற்சவத்தில் கலந்து கொண்டார். வித்தியாசமாக ஆடை அணிந்து வந்தவரை, கிராமத்தினர் ஆச்சரியமாக பார்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.
11_DMR_0026
ரத உற்சவத்தில் 500 ரூபாய் நோட்டுகளால் ஆன சட்டையை அணிந்து வந்த கல்லப்பா தல்வார்.