ADDED : மார் 14, 2024 11:23 PM
சண்டிகர்:பஞ்சாப் மாநில லோக்சபா தேர்தலுக்கான 8 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது.
பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு வர இருக்கும் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகிறது.
இதற்கான வேட்பாளர் முதல் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. ஐந்து அமைச்சர்கள் உட்பட எட்டு பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அமிர்தசரஸ் தொகுதியில் என்.ஆர்.ஐ., விவகாரத்துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், கதுார் சாஹிப் தொகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், பதிண்டா தொகுதியில் விவசாய துறை அமைச்சர் குர்மீத் சிங் குதியன், சங்ரூர் தொகுதியில் விளையாட்டு அமைச்சரும், இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த குர்மீத் சிங் ஹயர் மீட் ஹயர், பாட்டியாலாவைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஜலந்தர் தொகுதியில் சிட்டிங் எம்.பி., சுஷில் ரிங்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
பதேகர் சாஹிப் லோக்சபா தொகுதிக்கு குர்பிரீத் சிங் ஜபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் அவர் இணைந்தார்.
முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பிரபல பஞ்சாபி நடிகர் கரம்ஜீத் அன்மோல், பரித்கோட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

