சிறு விவசாயிகள், தொழில்முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்: பிரதமர் மோடி பேச்சு
சிறு விவசாயிகள், தொழில்முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்: பிரதமர் மோடி பேச்சு
UPDATED : பிப் 23, 2024 06:05 PM
ADDED : பிப் 23, 2024 04:20 PM

வாரணாசி: சிறு கைவினைக் கலைஞர்களை பிரபலப்படுத்த உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவாக உள்ளேன். சிறு விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களின் தூதராக செயல்பட்டு வருகிறேன்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார். காலை வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்துப் பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், பிறகு துறவி குரு ரவிதாசின் 647 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, வாரணாசியில் 13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வாரணாசியில், கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியானது பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உறுதி பூண்டுள்ளேன்.
சிறு கைவினைஞர்களை பிரபலப்படுத்த உள்ளூர் பொருட்களுக்கு நான் குரல் கொடுத்து வருகிறேன். சிறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்.
குடும்ப அரசியல், ஊழல் மற்றும் சமரச அரசியல் காரணமாக உ.பி., வளர்ச்சியில் பின் தங்கியது. காங்கிரசின் இளவரசர், காசி, மற்றும் உ.பி., இளைஞர்களை அடிமைகள் என்கிறார். என்ன மாதிரியான விமர்சனம் இது. அவர்கள் உ.பி., இளைஞர்கள் மீது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இளைஞர்கள் தங்களது மாநிலத்தை கட்டமைத்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பரிசு
ஹிந்து பனாரஸ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக காசி ரோப்வே பணிகளையும் பிரதமர் ஆய்வு செய்தார்.