தலைமை நீதிபதி மீது தாக்குதல்: வழக்கறிஞர் மீது நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் அனுமதி
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: வழக்கறிஞர் மீது நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் அனுமதி
ADDED : அக் 16, 2025 08:56 PM

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஒப்புதல் அளித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி வழக்கமான பணிகள் துவங்கின. நீதிமன்ற எண் 1ல் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரணையில் ஈடுபட்டு இருந்தது. அப்போது ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணியை வீசினார். உடனடியாக பாதுகாவலர்கள் அதனை தடுத்ததுடன், அவரை வெளியேற்றினர்.
சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் கஜூராகோவில் உள்ள கிருஷ்ணர் சிலையை சீரமைப்பது தொடர்பான வழக்கில் கவாய் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்டதாக ராஜேஷ் கிஷோர் தெரிவித்து இருந்தார். இதற்காக தான் வருத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி கூறுகையில், காலணி வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பார் கவுன்சிலில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் தலைவர் விகாஸ் சிங், 'ராஜேஷ் கிஷோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ' எனக்கோரியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி அவருக்கு எழுதிய கடிதத்தில், ' சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞரின் செயல்களும் பேச்சுகளும் அவதூறானது மட்டும் அல்ல. சுப்ரீம் கோர்ட்டின் மகத்துவத்தையும், அதிகாரத்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் உள்ளன. இதுபோன்ற நடத்தை நீதி வழங்கும் அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகிறது ' எனக்கூறியுள்ளதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்கிய தகவலை, சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.