டில்லியில் மீண்டும் அதிகரித்த காற்று மாசு: உடல்நல கோளாறு ஏற்படும் அபாயம்
டில்லியில் மீண்டும் அதிகரித்த காற்று மாசு: உடல்நல கோளாறு ஏற்படும் அபாயம்
ADDED : அக் 19, 2025 12:22 AM

புதுடில்லி: டில்லியில் காற்று மாசு அதிகரித்து, பல்வேறு பகுதிகளில் அபாய அளவான 300ஐ தாண்டியதால், சுவாச பிரச்னை, இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர் கள் எச்சரித்துள்ளனர்.
டில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகரை ஒட்டிய பகுதிகளில் ஆண்டு தோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குளிர்காலங்களில் வழக்கத்தை விட காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
முன்னெச்சரிக்கை இதனால், உலகளவில் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டில்லி இடம் பெற்றுள்ளது. இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக, முன்கூட்டியே காற்று மாசு அதிகரித்துள்ளதாக டில்லி மா சு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
ஏ.எஸ்.ஐ., எனப்படும் காற்றின் தரக்குறியீடு, 200க்கு கீழ் பதிவானால் எந்த பாதிப்பும் இல்லை. 200 - 300 வரையிலான குறியீடு மோசமானதாகவும், 301க்கு மேற்பட்ட குறியீடு மிகவும் மோசமானதாகவும் கருதப் படுகிறது.
நாட்டின் முதல் 10 மாசடைந்த நகரங்களில், டில்லியும் இடம் பிடித்துள்ளது.
டில்லி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில், காற்றின் தரக் குறியீடு நேற்று மோசமான நிலையில் பதிவாகியுள்ளது. டில்லி, அக்சர்தாம் பகுதி யில் காற்றின் குறியீடு 230ஐ எட்டியுள்ளது. பராபுல்லா பாலம் பகுதிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் அமைந்துள்ள பகுதியில், 252 ஆக பதிவாகி உள்ளது.
என்.சி.ஆர்., பகுதியில் உள்ள காஜியாபாதில், மிகவும் மோசமான நிலையாக தரக் குறியீடு 324ஐ எட்டியுள்ளது.
நாட்டிலேயே மிகவும் மோசமான பதிவான தரக்குறியீடு இது.
நொய்டாவில் 298 ஆகவும், குருகிராமில் 258 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், பரிதாபாதில் மிதமான நிலையாக தரக் குறியீடு 105 ஆக பதிவாகி உள்ளது.
டில்லியில் உள்ள 38 காற்று மாசுபாடு கண்காணிப்பு மையங்களில், ஐந்து இடங்கள் மிகவும் மோசமான பிரிவில் இடம் பிடித்துள்ளன.
ஆனந்த விஹாரில் 389 ஆகவும், வஜீர்பூரில் 351 ஆகவும், ஜஹாங்கிர்புரியில் 342 ஆகவும், பவானாவில் 315 ஆகவும், சிரிபோர்ட்டில் 309 ஆகவும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
கடந்த 14ம் தேதி முதல், டில்லி மற்றும் என்.சி.ஆர்., பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், சுவாச பிரச்னை உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
மூச்சுத்திணறல் இது குறித்து நுரையீரல் தொற்று நிபுணரும், உயிரி மருத்துவ விஞ்ஞானியுமான டாக்டர் அனுராக் அகர்வால் கூறுகையில், ''காற்று மாசின் தாக்கம் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற அசவுகரியங்களை ஏற்படுத்தும். இது, ரத்த அழுத்தத்தை அதிகரித்து மூளையை பாதிக்கும்.
''இதய நோய் உள்ளவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுவர். எனவே, நுரையீரல் தொற்று உள்ளவர்கள், வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது,'' என்றார்.