போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்து ஓடிய அஜித் பட நடிகர்
போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்து ஓடிய அஜித் பட நடிகர்
ADDED : ஏப் 18, 2025 01:50 AM

திருவனந்தபுரம்:போதையில், நடிகையிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரில், விசாரிக்கச் சென்ற போலீசாரைக் கண்டு, லாட்ஜில் தங்கி இருந்த நடிகர், ஜன்னல் வழியாக தப்பி தலைதெறிக்க ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம், பொன்னானி பகுதியைச் சேர்ந்தவர் நடிகை வின்சி அலோஷியஸ்.
விக்ருதி என்ற மலையாள சினிமா வாயிலாக, 2019ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார்.
ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக சர்ச்சையை கிளப்பினார்.
அந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்றும், பெயரை வெளியிட்டார். நடிகையின் புகார் பற்றி விசாரணை நடத்தவும், நடிகரிடம் போதை பொருள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர்.
சாக்கோ, கேரள மாநிலம், கலுார் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் இருப்பதாக அறிந்து, போலீசார் அங்கு விசாரிக்கச் சென்றனர். போலீசார் வருவதைப் பார்த்ததும், சாக்கோ ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் குதித்து, அங்கிருந்து தாவி நீச்சல் குளத்தில் குதித்து, தப்பி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்.
இந்த காட்சிகள் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்திலும், சாக்கோ நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.