விவாதத்தை உருவாக்கியுள்ள அஜ்மீர் தர்கா வழக்கு விசாரணை
விவாதத்தை உருவாக்கியுள்ள அஜ்மீர் தர்கா வழக்கு விசாரணை
ADDED : நவ 29, 2024 12:55 AM

புதுடில்லி,
அஜ்மீர் தர்கா அமைந்துள்ள இடத்தில் முன்பு சிவன் கோவில் இருந்ததாக கூறப்படும் வழக்கில் ஆய்வு நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது, விவாதத்தை உருவாக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா. சூபி ஞானி குவாஜா மொய்னுதீன் சிஸ்தியின் நினைவாக இது கட்டப்பட்டது. இந்த இடத்தில் சிவன் கோவில் இருந்ததாகவும், அது இடிக்கப்பட்டு, இந்த தர்கா கட்டப்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், பதிலளிக்கும்படி, தர்கா கமிட்டி, மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத் துறை, தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தர்கா கமிட்டி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், அஜ்மீர் தர்காவை பராமரிக்கும் அன்ஜுமன் சையது ஜட்கன் அமைப்பின் செயலர் சையது சர்வார் சிஸ்தி, இந்த விவகாரம் மத ரீதியில் சமூகத்தில் பிளவு ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ளார்.
''பாபர் மசூதி வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றனர். அதன்பின் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்று நினைத்தோம். ஆனால், தற்போது மசூதிகளுக்கு எதிராக அதிகளவில் மனுக்கள், வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன,'' என, அவர் குறிப்பிட்டார்.
''அஜ்மீர் தர்காவை, சங்கட மோட்ச மகாதேவ கோவில் என்று அறிவிக்க வேண்டும். தர்கா பெயரில் எந்த பதிவுகள் இருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும். இங்கு ஹிந்துக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை,'' என, வழக்கின் மனுதாரரான ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கூறியுள்ளார்.
கடந்த, 1991ல் அமல்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தை மீறுவதாக இந்த வழக்குகள் உள்ளதாக, ராஜஸ்தான் ஒன்றுபட்ட முஸ்லிம்கள் அமைப்பின் தலைவர் மிஜாபர் பர்த்தி கூறியுள்ளார்.
சட்டத்தின்படி, 1947 ஆக., 15ல் இருந்த வழிபாட்டு தலங்கள் தொடர்பாக எந்தப் பிரச்னையும் எழுப்பக் கூடாது என, அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு தரப்பினரும், நீதிமன்ற உத்தரவு தொடர்பாக கருத்துக்களை கூறியுள்ளனர்.
ஆய்வை எதிர்ப்பதா?
ஆய்வு நடத்துவதை ஏன் எதிர்க்க வேண்டும். முகலாயர்கள் படையெடுப்பின்போது, ஹிந்து கோவில்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு, மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதை, 1947ல், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தடுத்திருக்க வேண்டும். ஆனால், காங்., தாஜா அரசியலையே செய்து வந்துள்ளது. அதனால்தான், தற்போது அதிகளவில் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- கிரிராஜ் சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.,