அம்பாரி வழங்கலில் தாமதம்? மன்னர் குடும்பம் விளக்கம்!
அம்பாரி வழங்கலில் தாமதம்? மன்னர் குடும்பம் விளக்கம்!
ADDED : அக் 13, 2024 11:14 PM

மைசூரு: ஜம்பு சவாரியின் போது தங்க அம்பாரியை தாமதமாக வழங்கியதாக வந்த செய்தியை மறுத்த, மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி, அதற்கான காரணத்தை விளக்கி உள்ளார்
மைசூரு தசரா விழா, பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா பயணியர் தங்க அம்பாரி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். ஊர்வலம் அன்றைய தினம் மாலை 4:00 மணி முதல் 4:30 மணிக்குள் ஊர்வலம் துவக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், 5:02 மணிக்கு தான் துவங்கியது. மன்னர் குடும்பத்தினர் தாமதம் செய்ததால் தான், இதுபோன்று நடந்தது என்று பலரும் கூறி வந்தனர்.
இதற்கு பதிலளித்து மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மைசூரு அரண்மனை வளாகத்தில், ஜம்பு சவாரியன்று தங்க அம்பாரியை, மன்னர் குடும்பத்தினர் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், தாமதமாக ஊர்வலம் துவங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது, மனதுக்கு வேதனையாக உள்ளது.
நிகழ்ச்சியை சுமுகமாக நடத்த நாங்கள் அனைத்து முயற்சிகளும் செய்தோம். ஆனால், தங்க அம்பாரி தயாராக இருந்தபோதும், அம்பாரியை கொண்டு செல்லும் பாதையில் அதிக கூட்டம், அரசு கார்கள், சில வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்தன.
சம்பந்தப்பட்ட ஊழியர்கள், வாகனங்களை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தேவையற்ற பதற்றமான சூழ்நிலையை தவிர்க்க, வருங்காலத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.