ADDED : டிச 09, 2024 03:40 AM
ஹைதராபாத் : தெலுங்கானாவில் கடத்தி செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை 100 கி.மீ., தொலைவுக்கு விரட்டிச் சென்று போலீசார் பிடித்ததுடன், கடத்திய நபரையும் கைது செய்தனர்.
தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சரூர் நகரில் இருந்து நோயாளி ஒருவரை, '108 ஆம்புலன்ஸ்' வாகனத்தின் வாயிலாக ஹயத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது, தாங்கள் நிறுத்தியிருந்த ஆம்புலன்ஸ் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கண்காணிப்பு
உடனே, ஆம்புலன்சில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக தங்களின் வாகனம் எங்கு உள்ளது என்பதை கண்காணித்தனர். அது, ஹைதராபாத் - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் செல்வதை கண்டறிந்து, போலீசில் புகார் அளித்தனர்.
இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கு தகவல் அளித்தனர்.
அத்துடன், ஜி.பி.எஸ்., உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தின் அருகே ஆம்புலன்சை போலீசார் வழிமறித்தனர்.
கவிழ்ந்தது
ஆனால், அவர்கள் மீது மோதி, நிற்காமல் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது. இதில், சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து, அந்த வாகனத்தை பிடிக்கும் முயற்சியை போலீசார் தீவிரப்படுத்தினர். கொள்ளபட் சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்சை போலீசார் மடக்கியநிலையில், அதை கடத்தி சென்ற நபர் வேறு திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றார்.
அப்போது, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது. உடனே, அதை கடத்தி வந்த நபர் தப்பியோட முயன்றார்.
அப்போது, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் மெஹபூபா மாவட்டத்தின் லட்சுமி நரசிம்மபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு, 55, என்பது தெரிய வந்தது.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. மருத்துவமனை முன் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் யாரும் இல்லாததால், அதை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.
எனினும் எதற்காக ஆம்புலன்சை கடத்தினார் என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.