வேற லெவல் சாதனை... ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு
வேற லெவல் சாதனை... ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு
ADDED : அக் 30, 2024 02:28 PM

புதுடில்லி: உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது.
உலகின் வெவ்வேறு பகுதியில் நடக்கும் போர்கள், பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம், நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருகிறது; அந்நியச் செலாவணி கையிருப்பும், தங்கம் கையிருப்பும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது. ரிசர்வ் வங்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 2024ம் ஆண்டு நிலவரப்படி, ரிசர்வ் வங்கி 854.73 மெட்ரிக் டன் தங்கத்தை கையிருப்பு வைத்துள்ளது. இதில் 510.46 மெட்ரிக் டன் தங்கம் உள்நாட்டில் உள்ளது..
மீதமுள்ள தங்கம் சர்வதேச வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு குறிப்பிட்டத்தக்க உயர்வை கண்டுள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் 822 மெட்ரிக் டன்கள் தங்கம் கையிருப்பு இருந்தது. தற்போது செப்டம்பர் மாதம் இறுதியில் 854.73 மெட்ரிக் டன்களாக தங்கம் உயர்வை கண்டுள்ளது. மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாத வரை இடைப்பட்ட காலத்தில், மெட்ரிக் 32 டன் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதம் துவக்கத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு முதல்முறையாக 700 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது சாதனை படைத்தது. அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 8.15 சதவீதமாக இருந்தது. தற்போது 9.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.