ADDED : நவ 13, 2024 11:58 PM
துலே: ''ராகுல் அவர்களே, நீங்கள் மட்டுமல்ல. உங்கள் நான்காவது தலைமுறை வந்தாலும், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது,'' என, ராகுலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்தார்.
மஹாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
சில நாட்களுக்கு முன், காங்., தலைவர்களை சந்தித்து, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி, உலமாக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைப்பெற்ற காங்., தலைவர்கள், இதற்கு உதவுவதாக உறுதி அளித்தனர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்பட வேண்டும்.
ராகுல் அவர்களே, நீங்கள் மட்டுமல்ல. உங்கள் நான்காவது தலைமுறை வந்தாலும், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை குறைத்து, முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது. பா.ஜ., இருக்கும்வரை அது நடக்கவே நடக்காது.
நான் மஹாராஷ்டிரா முழுதும் பயணம் மேற்கொண்டேன். 20ல் நடக்கும் தேர்தலில், மஹாயுதி கூட்டணி வெற்றி பெறும் என, நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.