ஆந்திரா தொகுதிகள் பங்கீடு தெலுங்கு தேசம், பா.ஜ., இழுபறி
ஆந்திரா தொகுதிகள் பங்கீடு தெலுங்கு தேசம், பா.ஜ., இழுபறி
ADDED : மார் 09, 2024 11:38 PM
அமராவதி: ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், பா.ஜ., - ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆலோசனை
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கடந்த 2018ல், ஆந்திராவில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இருந்து பிரிந்த, அந்த மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மீண்டும் அதில் இணைவதற்கான நடவடிக்கையை கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரப்படுத்தி வந்தது.
மாநில அரசியலில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சந்திரபாபு நாயுடு, ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜ.,வுடன் சேர முடிவெடுத்து, டில்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்தார்.
சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் இருவரும் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசிய நிலையில், நேற்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.
இதில், பா.ஜ., தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகியவை இணைந்து லோக்சபா தேர்தலையும், ஆந்திரா சட்டசபை தேர்தலையும் சந்திப்பது உறுதியானதாக சந்திரபாபு நாயுடு கூறினார்.
பேச்சில் இழுபறி
இது குறித்து அவர் கூறியதாவது:
மீண்டும் தே.ஜ., கூட்டணியில் நாங்கள் இணைகிறோம். ஜனசேனா கட்சியும் எங்களுடன் கூட்டணியில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக ஜெகன்மோகன் தலைமையிலான அரசில், ஆந்திரா அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
வரும் தேர்தலில், எங்கள் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் மற்றும் அதனுடன் சேர்ந்து நடக்கவுள்ள ஆந்திரா சட்டசபை தேர்தலின் தொகுதி பங்கீடு குறித்து, மூன்று கட்சித் தலைவர்களும் டில்லியில் ஆலோசனை நடத்தினர்.
இதில், மொத்தமுள்ள 25 லோக்சபா தொகுதிகளில், ஆறு இடங்களில் பா.ஜ.,வும், இரண்டு இடங்களில் ஜனசேனாவும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 17 இடங்களில் தெலுங்கு தேசம் போட்டியிட முடிவு செய்துள்ளது.
மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில், 30 தொகுதிகளில் பா.ஜ., மற்றும் ஜனசேனாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ள தெலுங்கு தேசம், 145 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி, ராஜம்பேட், திருப்பதி மட்டுமின்றி, மேலும் ஒரு முக்கிய தொகுதியை பா.ஜ., கேட்பதால், பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

