ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: நவ.14ல் ஆஜராக அனில் அம்பானிக்கு ஈ.டி., நோட்டீஸ்
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: நவ.14ல் ஆஜராக அனில் அம்பானிக்கு ஈ.டி., நோட்டீஸ்
ADDED : நவ 06, 2025 01:32 PM

புதுடில்லி: ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 14ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரரும், தொழிலதிபருமான அனில் அம்பானி, தன் நிறுவனங்கள் பெயரில் வாங்கிய கடனை, மற்ற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூலையில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் தொடர்புடைய 35 இடங்களில் சோதனை நடத்தியது.இதில், 17,000 கோடி ரூபாய் அளவுக்கு, பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக கடனாக பெற்ற தொகை, சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பான புகாரில், கடந்த ஆகஸ்டில் அனில் அம்பானி விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது. பிறகு, கடந்த செப்டம்பரில் அனில் அம்பானி மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அனில் அம்பானியின் மும்பை வீடு, அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான டில்லி, புனே, தானே, நொய்டா, காஷியாபாத், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துக்களை, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை 7,500 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த கட்டமாக மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் விசாரணையை துவக்கியுள்ளது. இந்நிலையில் இன்று (நவ., 06) இந்த வழக்கில், அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 14ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை, அமலாக்கத்துறை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

