ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
ADDED : நவ 06, 2025 01:02 PM

பாட்னா: ''ஊடுருவல்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்புவோம்; ஆர்ஜேடி-காங்கிரஸ் அவர்களை பின்வாசல் வழியாக இந்திய குடிமக்களாக மாற்ற முயற்சி செய்கின்றனர்,'' என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
பீஹார் மாநிலத்தில் 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (நவ., 06) முதல் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழலில் இரண்டாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக, ஹராரியாவில், தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பீஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்ற பிறகு மாநிலம் வளர்ச்சியை நோக்கி சென்றது.
பாஜ தலைமையிலான மத்திய அரசு பீஹார் மாநில விவசாயிகளுக்கு அதிக நிதி வழங்கி உள்ளது. ஆர்ஜேடி ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. நிதிஷ் குமார் ஆட்சி காலத்தில் தான் வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்தன.
சமூக நீதியின் பூமி
1990-2005ம் ஆண்டு வரை ரவுடிகள் ராஜ்ஜியம், பழி தீர்த்தல், ஊழல் என பீஹாரில் இருந்ததை ஒழித்துள்ளோம். 15 ஆண்டுகளாக இந்த காட்டாட்சி ராஜ்ஜியம் பீஹாரை பேரழிவுக்கு உட்படுத்தியது. உங்கள் தாத்தா, பாட்டியின் ஒரு ஓட்டு பீஹாரை சமூக நீதியின் பூமியாக மாற்றியது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இடையேயான மோதல் தற்போது பீஹாரில் உள்ள துணை முதல்வர் வேட்பாளர் 'காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கு' எதிராகப் பேசும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஊடுருவல்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்புவோம்;
அதிகமாக ஓட்டளியுங்கள்
ஆர்ஜேடி-காங்கிரஸ் அவர்களை பின்வாசல் வழியாக இந்திய குடிமக்களாக மாற்ற முயற்சி செய்கிறது. இன்று முதல் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவில், பீஹார் வளர்ச்சிக்கு மக்கள் ஓட்டளிக்கின்றனர். மாநிலத்தில் ஊடுருவல்கள் பெரிய சவாலாகவே உள்ளன. ஊடுருவல்காரர்களை ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆதரிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகமாக ஓட்டளிக்க வேண்டும்.
பீஹார் மக்கள் காலையிலிருந்தே ஓட்டுச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பீஹார் இளைஞர்களிடையே முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் நிலவுகிறது. அனைத்து வாக்காளர்களையும் நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

