ADDED : அக் 11, 2025 11:54 PM

புதுடில்லி: பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியுமான அசோக் பால், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒ ருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டதுடன், 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக, அனில் அம்பானி மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளரும், 'ரிலையன்ஸ்' குழுமத்தை சேர்ந்த, 'ரிலையன்ஸ் பவர்' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான அசோக் பாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான 'ரிலையன்ஸ் பவரின்' துணை நிறுவனமான 'ரிலையன்ஸ் என்யூ பெஸ் லிமிடெட்' சார்பில் எஸ்.இ.சி.ஐ., எனப்படும், 'சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா'வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 68.2 கோடி ரூபாய்க்கு, பிலிப்பைன்ஸ் வங்கி கிளையின் உத்தரவாதம் அளிக்கப் பட்டது. இது, போலியானது என கண்டறியப்பட்டது.
இந்த போலி வங்கி உத்தரவாதத்தை அடிப்படையாக வைத்து போலி ரசீதுகள், போலி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி நிதியை அசோக் பால், திசைத்திருப்பி மிகப்பெரிய அளவில் கடன் மோசடி செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டறிந்தனர்.
இந்த மோசடியில், அசோக் பால் முக்கிய பங்கு வகித்ததாக கூறி, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, இந்த வழக்கில், 'ரிலையன்ஸ் பவர்' நிறுவனம் போலி வங்கி உத்தரவாதம் பெற உதவியதாக, 'பிஸ்வால் டிரேட்லிங்க்' என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வால் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.