தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/என் வாழ்நாளில் இப்படி பார்த்ததே இல்லை; மதுரை கே.ஆர்.எஸ்., பள்ளி விழாவில் அண்ணாமலை நெகிழ்ச்சி

என் வாழ்நாளில் இப்படி பார்த்ததே இல்லை; மதுரை கே.ஆர்.எஸ்., பள்ளி விழாவில் அண்ணாமலை நெகிழ்ச்சி

என் வாழ்நாளில் இப்படி பார்த்ததே இல்லை; மதுரை கே.ஆர்.எஸ்., பள்ளி விழாவில் அண்ணாமலை நெகிழ்ச்சி


ADDED : ஆக 25, 2025 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: 'விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று 779 மாணவர்கள் கடிதத்தில் கையெழுத்து போட்டு அழைத்தது என் வாழ்நாளில் இதுதான் முதல்முறை,' என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள கேஆர்எஸ் பள்ளி( ( கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி) விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது; தனி மனிதனாக, குழுவாக ஒரு குழந்தையின் திறமையையும், ஆற்றலையும் சோதித்து பார்க்கவே, இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டி இருக்கும் சூழலில், ஒரு குழந்தை எப்படி தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறது, நேர்மையாக விளையாடுகிறார்களா? என அனைத்தையும் பார்ப்பதற்கான நேரம். ஒரு விளையாட்டு வீரராக உங்களை பக்குவப்படுத்திக் கொண்டதற்கும், அடுத்த 25 அல்லது 30 ஆண்டுகளில் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல குடிமகனாகப் பாடுபடப் போவதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

1995ல் தொடங்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் உயரிய விருது பெற்ற பத்மஸ்ரீ விருதாளர் லட்சுமிபதி ஐயாவால் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. ஒழுக்கம் மற்றும் நேர மேலாண்மையை சிறப்பாக கடைபிடிப்பவர் பள்ளி செயலாளர் டாக்டர் ராமசுப்பு. மேலும், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டுகிறேன்.

என்னுடைய வாழ்நாளில் 779 மாணவர்கள் கடிதத்தில் கையெழுத்து போட்டு, எங்களுடைய விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று அழைத்தது எங்கேயும் நான் கேட்டதில்லை, பார்த்ததில்லை, எனக்கு அது நடந்ததும் இல்லை. மாணவ செல்வங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டை மனிதனிடம் இருந்து பிரித்து பார்க்க முடியாது. ஒவ்வொரு குழந்தையும் விளையாட ஆரம்பிக்கும் போது தான், உடலும், மனதும் பக்குவப்படும். எல்லா குழந்தைகளையும் விளையாட வைப்பது தான் பள்ளியின் சிறப்பு. என்னைப் பொறுத்தவரையில் கே.ஆர்.எஸ்., பள்ளி வெற்றி பெற்றதாகத் தான் பார்க்கிறேன். இந்தப் பள்ளியை நினைத்து நிச்சயமாக பெற்றோர் பெருமைப்பட வேண்டும்.

பகவத் கீதையோ, குரானையோ, பைபிளையோ நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கொஞ்சம் உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். உங்களுக்கு கிருஷ்ணரையும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்கள் ரத்தம் சூடாக இருக்க வேண்டும். உங்கள் உடம்பில் உள்ள ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்கள் உடம்பு நேராக, சீர்கோட்டோடு, பாதத்தின் மீது கம்பீரமாக உடம்பு நிற்கும் போது தான் ஆத்மாவை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால், கீதையை படிப்பதை விட, கால்பந்து விளையாடினால் சொர்க்கத்தை நோக்கி வேகமாக போவீர்கள், என்று விவேகானந்தர் கூறினார். சில பேர் தவறாக புரிந்து கொள்வார்கள். கீதையை விட கால்பந்து முக்கியம் என்று எங்கேயும் நான் சொல்லவில்லை.

பகவத் கீதை, பைபிள், குரானை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நல்ல உடம்பு, ஆரோக்யமான மனது இருந்தால் மட்டுமே முடியும் என்கிறார் விவேகானந்தர். உங்களை மாதிரி உடல் தகுதி முழுமையாக இருக்கும் 100 பேரை கொடுத்தால், இந்த நாட்டை மாற்றிக் காட்டுவேன் என்று விவேகானந்தர் கூறினார்.

ஒரு நல்ல சிப்பாய் மட்டும் தான் வரும் காலத்தில் நல்ல ராணுவ தளபதியாக வர முடியும். குழந்தைகள் எவ்வளவு படித்தாலும், அடிப்படை விளையாட்டு கண்டிப்பாக வேண்டும் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது தான் இந்தியா ஒரு விளையாட்டு நாடாக மாற ஆரம்பித்துள்ளது. உலக நாடுகள் வரிசையில் விளையாட்டில் இந்தியா பெயர் வாங்க ஆரம்பித்து விட்டது. 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி முனைப்பாக களத்தில் இறங்கியுள்ளார். கடந்த 120 ஆண்டுகளாக இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டதில்லை. ஒலிம்பிக்கில் பதக்கமே வாங்காத நாடாக இருந்த நிலையை மாற்றி, ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறோம்.

விளையாட்டு மட்டும் அனைத்தையும் சமம் என்பதை உணர்த்தும். எதை செய்தாலும் முழு மனதுடன் செய்ய வேண்டும். நேர்மையாக விளையாடியும் தோற்றாலும் தங்கம் ஜெயித்ததற்கு சமம். விளையாட்டில், கர்வம், பொறாமை மட்டுமே வரவே கூடாது. போட்டியில் முதல் பரிசை வென்றவர், போடியமில் உயரமான இடத்தில் நிற்க வைப்பது ஏன் தெரியுமா? அவர் தான் தலையை ரொம்பவும் குனிந்து பதக்கத்தை வாங்க வேண்டும். அந்தக் கர்வம் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் இனிமையாக இருக்க வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us